அறச்செயல்கள்
1 மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன்
உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.
இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.
இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து
உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
தர்மம் செய்தல்
2 நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.
வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று
தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்.
அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
3 நீங்கள் தர்மம் செய்யும்போது,
உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.
4 அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்;
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும்
உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
இறைவேண்டல்
(லூக் 11:2-4)
5 நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது
வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம்.
அவர்கள் தொழுகைக்கூடங்களிலும்
வீதியோரங்களிலும் நின்றுகொண்டு
மக்கள் பார்க்க வேண்டுமென
இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள்.
அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
[1]
6 ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது
உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு,
மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்.
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும்
உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
7 மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது
பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்;
மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால்
தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
8 நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம்.
ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை
உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
9 ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்:
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!
10 உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக!
11 இன்று தேவையான உணவை
[2] எங்களுக்குத் தாரும்.
12 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்.
13 எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ["ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்."]
[3]
14 மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால்
உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.
15 மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில்
உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.
[4]
நோன்பு இருத்தல்
16 மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது
வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்.
தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே
அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள்.
அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
17 நீங்கள் நோன்பு இருக்கும்போது
உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.
18 அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது;
மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும்.
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும்
உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.
உண்மைச் செல்வம்
19 "மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம்.
இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்;
திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.
[5]
20 ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்;
அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை;
திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
21 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
உடலுக்கு விளக்கு
(லூக் 11:34-36)
22 "கண்தான் உடலுக்கு விளக்கு.
கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.
23 அது கெட்டுப் போனால்,
உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்.
ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிருந்தால்
இருள் எப்படியிருக்கும்!
கடவுளா? செல்வமா?
(லூக் 16:13)
24 எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது.
ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்;
அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.
நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
கவலை வேண்டாம்
(லூக் 12:22-34)
25 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ,
உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்.
உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்;
அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை;
களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை.
உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார்.
அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!
27 கவலைப்படுவதால் உங்களில் எவர்
தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?
[6]
28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்;
அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.
29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம்
அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என
நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
[7]
30 நம்பிக்கை குன்றியவர்களே,
இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக்
கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால்
உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?
31 ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்?
எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.
32 ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்;
உங்களுக்கு இவை யாவும் தேவை என
உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.
33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும்
அவருக்கு
[8] ஏற்புடையவற்றையும் நாடுங்கள்.
அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.
ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்.
அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
- குறிப்புகள்
[1] 6:5 - லூக் 18:10-14.
[2] 6:11 - "இன்று தேவையான உணவை"என்னும் சொற்றொடரை "எங்கள் அன்றாட உணவை" அல்லது "நாளைய உணவை" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[3] 6:13 - "ஆட்சியும்... ஆமென்" என்னும் அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்றொடர் இவ்வேண்டலின் இறுதியில் சில முக்கியமல்லாத கையெழுத்துப்படிகளில் மட்டும் காணப்படுகிறது.
[4] 6:14,15 - மாற் 11:25-26.
[5] 6:19 - யாக் 5:2,3.
[6] 6:27 - "தமது... முடியும்?" என்னும் சொற்றொடரை "தமது ஆயுளோடு ஒரு நாளைக் கூட்ட முடியும்?" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[7] 6:29 - 1 அர 10:1-29.
[8] 6:33 - "அவருக்கு" என்னும் சொல்லை "அதற்கு" எனவும் மொழிபெயர்க்கலாம்.