எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல்
(மாற் 13:1-2; லூக் 21:5-6)
1 இயேசு கோவிலைவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தபோது
அவருடைய சீடர்கள் கோவில் கட்டடங்களை அவருக்குக் காட்ட
அவரை அணுகி வந்தார்கள்.
2 அவர் அவர்களைப் பார்த்து,
"இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா!
இங்கே, கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல்
(மாற் 13:3-13; லூக் 21:7-19)
3 ஒலிவ மலைமீது இயேசு அமர்ந்திருந்தபோது
சீடர்கள் அவரிடம் தனியாக வந்து,
"நீர் கூறியவை எப்போது நிகழும்?
உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன?
எங்களுக்குச் சொல்லும்" என்று கேட்டார்கள். [1]
4 அதற்கு இயேசு கூறியது:
"உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5 ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து,
'நானே மெசியா' என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர்.
6 போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள்.
ஆனால் திடுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா.
7 நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.
பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும்.
8 இவையனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே.
9 பின்பு உங்களைத் துன்புறுத்திக் கொல்வதற்கென ஒப்புவிப்பர்.
என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர்.
[2]
10 அப்பொழுது பலர் நம்பிக்கையை இழந்துவிடுவர்;
ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பர்; ஒருவரையொருவர் வெறுப்பர்.
11 பல போலி இறைவாக்கினர் தோன்றிப் பலரை நெறிதவறி அலையச் செய்வர்.
12 நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்.
13 ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.
14 உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு
விண்ணரசைப்பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும்.
அதன் பின்பு முடிவு வரும்.
வரப்போகும் பெரும் துன்பம்
(மாற் 13:14-23; லூக் 21:20-24)
15 "இறைவாக்கினர் தானியேல் உரைத்த,
'நடுங்கவைக்கும் தீட்டு'
[3] திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள்.
- அப்பொழுது இதைப்படிப்பவர் புரிந்துகொள்ளட்டும்.-
16 யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.
17 வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்கித்
தம் வீட்டிலிருந்து எதையும் எடுக்காது ஓடட்டும்.
18 வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வரவேண்டாம்.
[4]
19 அந்நாள்களில் கருவுற்றிருப்போர் பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்!
20 குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ
நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.
21 ஏனெனில் அப்போது பெரும் வேதனை உண்டாகும்.
உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை;
இனிமேலும் உண்டாகப்போவதில்லை.
[5]
22 அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது.
எனவே தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார்.
23 அப்பொழுது யாராவது உங்களிடம்,
'இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார்'
எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்.
[6]
24 ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி,
முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய
பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள்.
[7]
25 இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.
26 ஆகையால் எவராவது உங்களிடம் வந்து,
'அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார்' என்றால் அங்கே போகாதீர்கள்;
'இதோ, உள்ளறையில் இருக்கிறார்' என்றால் நம்பாதீர்கள்.
27 ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல
மானிட மகனின் வருகையும் இருக்கும்.
28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.
[8]
மானிடமகன் வருகை
(மாற் 13:24-27; லூக் 21:25-26)
29 "துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும்;
நிலா தன் ஒளி கொடாது;
விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்;
வான்வெளிக்கோள்கள் அதிரும்.
[9]
30 பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும்.
அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன்
வானத்தின் மேகங்களின்மீது வருவார்.
இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர்.
[10]
31 அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார்.
அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை
நான்கு திசைகளிலிருந்தும்
தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்.
அத்தி மர உவமை
(மாற் 13:28-31; லூக் 21:29-33)
32 "அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள்.
அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது
கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.
33 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது
மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
34 இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
35 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்.
ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.
மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(மாற் 13:32-37; லூக் 17:26,30,34-36)
36 "அந்த நாளையும் வேளையையும்பற்றித்
தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.
விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது.
37 நோவாவின் காலத்தில் இருந்தது போலவே
மானிட மகன் வருகையின்போதும் இருக்கும்.
[11]
38 வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில்,
நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை
எல்லாரும் திருமணம் செய்து கொண்டும்
உண்டும் குடித்தும் வந்தார்கள்.
39 வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை
அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள்.
அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும்.
[12]
40 இருவர் வயலில் இருப்பர்.
ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
41 இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர்.
ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
42 விழிப்பாயிருங்கள்;
ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.
43 இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று
வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால்
அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள்.
44 எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.
ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.
[13]
நம்பிக்கைக்குரிய பணியாளர்
(லூக் 12:41-48)
45 "தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத்
தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரிய வரும் அறிவாளியுமான பணியாளர் யார்?
46 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர்.
அவர் பேறு பெற்றவர்.
47 அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
48 அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால்,
தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு,
49 தன் உடன் பணியாளரை அடிக்கவும்
குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான்.
50 அப்பணியாள் எதிர்பாராத நாளில்,
அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார்.
51 அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி
வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.
அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.
- குறிப்புகள்
[1] 24:3 - 1 யோவா 2:28.
[2] 24:9 - மத் 10:22.
[3] 24:15 - "நடுங்க வைக்கும் தீட்டு" என்பது மக்கபேயர் காலத்தில் எருசலேம் கோவிலில் அந்தியோக்கு எப்பிப்பானசு நிறுவிய சிலையைக் குறிக்கும். இதனைப் பற்றித் தானி 9:27; 11:31; 12:11; 1 மக் 1:54 ஆகிய வசனங்களில் காணலாம்.
[4] 24:17,18 - லூக் 17:31.
[5] 24:21 - தானி 12:1; திவெ 7:14.
[6] 24:23 - லூக் 17:23,24; 2 தெச 2:3; 4:9.
[7] 24:24 - 2 பேது 2:1-3; 1 யோவா 4:1.
[8] 24:28 - யோபு 39:30; லூக் 17:37.
[9] 24:29 - எசா 13:10; 34:4; எசே 32:7; யோவே 2:10,31; 3:15; திவெ 6:12,13.
[10] 24:30 - தானி 7:13; திவெ 1:7; 1 தெச 4:16.
[11] 24:37 - தொநூ 6:5-8; எபி 11:7.
[12] 24:39 - தொநூ 7:11-23; 2 பேது 3:6.
[13] 24:42-44 - மத் 25:13; லூக் 12:39,40; 1 தெச 5:2; 2 பேது 3:10; திவெ 3:3.