முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்தல்
(மத் 9:1-8; லூக் 5:17-26)
1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார்.
அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.
2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று.
அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.
3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை
நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.
4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால்
அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை.
எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே
வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி,
முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.
5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு,
முடக்குவாதமுற்றவரிடம்,
"மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"
என்றார்.
6-7 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர்,
"இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?
இவன் கடவுளைப் பழிக்கிறான்.
கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?"
என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.
8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை
இயேசு தம்முள் உணர்ந்து,
அவர்களை நோக்கி,
"உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?
9 முடக்குவாதமுற்ற இவனிடம்
'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா?
'எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட' என்பதா? எது எளிது?
10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க
மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை
நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்"
என்றார்.
எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,
11 "நான் உனக்குச் சொல்கிறேன்,
நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு
உனது வீட்டுக்குப் போ"
என்றார்.
12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு
எல்லாரும் காண வெளியே சென்றார்.
இதனால் அனைவரும் மலைத்துப்போய்,
"இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே" என்று கூறிக்
கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
லேவியை அழைத்தல்
(மத் 9:9-3; லூக் 5:27-32)
13 இயேசு மீண்டும் கடலோரம் சென்றார்.
மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே,
அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.
14 பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது
அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில்
அமர்ந்திருந்ததைக் கண்டார்;
அவரிடம், "என்னைப் பின்பற்றி வா"
என்றார்.
அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
15 பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது
வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர்
இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்.
16 அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப்
பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு,
அவருடைய சீடரிடம்,
"இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?"
என்று கேட்டனர்.
17 இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி,
"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை.
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்"
என்றார்.
நோன்பு பற்றிய கேள்வி
(மத் 9:14-17; லூக் 5:33-39)
18 யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர்.
சிலர் இயேசுவிடம்,
"யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க,
உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?" என்று கேட்டனர்.
19 அதற்கு இயேசு அவர்களை நோக்கி,
"மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள்
நோன்பு இருக்கமுடியுமா?
மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம்
அவர்கள் நோன்பிருக்க முடியாது.
20 ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப்
பிரியவேண்டிய காலம் வரும்.
அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
21 எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை.
அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்;
கிழிசலும் பெரிதாகும்.
22 அதுபோலப் பழைய தோற்பைகளில்,
எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை.
ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்;
மதுவும் தோற்பைகளும் பாழாகும்.
புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது"
என்றார்.
ஓய்வுநாளில் கதிர் கொய்தல்
(மத் 12:1-8; லூக் 6:1-5)
23 ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது.
அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். [1]
24 அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம்,
"பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை
ஏன் இவர்கள் செய்கிறார்கள்?" என்று கேட்டனர்.
25 அதற்கு அவர் அவர்களிடம்,
"தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப்
பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை
நீங்கள் வாசித்ததே இல்லையா?
26 அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது
தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று,
குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத
அர்ப்பண அப்பங்களைத்
தாம் உண்டதுமன்றித்
தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?"
என்றார். [2] [3]
27 மேலும் அவர் அவர்களை நோக்கி,
"ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது;
மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை.
[4]
28 ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே"
என்றார்.- குறிப்புகள்
[1] 2:23 - இச 23-25.
[2] 2:25,26 - 1 சாமு 21:1-6.
[3] 2:26 - லேவி 24:9.
[4] 2:27 - இச 5:14.