மூதாதையர் மரபு
1 ஒருநாள் பரிசேயரும்
எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும்
அவரிடம் வந்து கூடினர்.
2 அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது,
கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். [1]
3 பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே,
தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக்
கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; [2]
4 சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே [3] உண்பர்.
அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள்
ஆகியவற்றைக் கழுவுதல் போன்று
அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
5 ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி,
"உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல்
தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" என்று கேட்டனர்.
6 அதற்கு அவர்,
"வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி
எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார்.
'இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது.
7 மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று
அவர் எழுதியுள்ளார். [4]
8 நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு
மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்"
என்று அவர்களிடம் கூறினார்.
9 மேலும் அவர்,
"உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை
வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.
10 'உன் தந்தையையும் தாயையும் மதித்துநட' என்றும் தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்
என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா!
[5]
11 ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து,
'நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது 'கொர்பான்' ஆயிற்று;
அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று' என்றால்,
12 அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு
எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.
13 இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக்
கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்.
இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்"
என்று அவர்களிடம் கூறினார்.
14 இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து,
அவர்களை நோக்கி,
நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்.
15 வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று '
அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை.
மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே
அவர்களைத் தீட்டுப் படுத்தும்.
16 [கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் "]
[6] என்று கூறினார்.
17 அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது
அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப்பற்றிக் கேட்க,
18 அவர் அவர்களிடம்,
"நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்?
வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும்
அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா?
19 ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல்
வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது"
என்றார்.
இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப்பிட்டார். [7]
20 மேலும் "மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும்.
21 ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு,
கொலை, விபசாரம், பேராசை,
22 தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை,
செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும்
தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.
23 தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து
மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன"
என்றார்.
கானானியப் பெண்ணின் நம்பிக்கை
(மத் 15:21-28)
24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத்
தீர் பகுதிக்குள் சென்றார்.
அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்;
தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும்
அதை மறைக்க இயலவில்லை.
25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு
உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார்.
அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.
26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர்.
அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.
27 இயேசு அவரைப் பார்த்து,
"முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும்.
பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து
நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல"
என்றார்.
28 அதற்கு அப்பெண்,
"ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள்
சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே" என்று பதிலளித்தார்.
29 அப்பொழுது இயேசு அவரிடம்,
"நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்;
பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று"
என்றார்.
30 அப்பெண் தம் வீடு திரும்பியதும்
தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும்
பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.
காதுகேளாதவர் நலம் பெறுதல்
31 மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு,
சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து,
கலிலேயக் கடலை அடைந்தார்.
32 காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச்
சிலர் அவரிடம் கொண்டு வந்து,
அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். [8]
33 இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று,
தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு,
உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.
34 பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து,
பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி "எப்பத்தா"
அதாவது "திறக்கப்படு"
என்றார்.
35 உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன;
நாவும் கட்டவிழ்ந்தது.
அவர் தெளிவாகப் பேசினார்.
36 இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று
அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.
அவரது கட்டளைக்கு நேர்மாறாக
இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். [9]
37 அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய்,
"இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்!
காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!" என்று பேசிக்கொண்டார்கள். [10]- குறிப்புகள்
[1] 7:2 - லூக் 11:38.
[2] 7:3 - யோவா 2:6; கலா 1:14.
[3] 7:4 - "சந்தையிலிருந்து...பின்னரே" என்னும் சொற்றொடரை "பொது இடங்களிலிருந்து வந்ததும் குளித்த பின்னரே" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[4] 7:6,7 - எசா 29:13.
[5] 7:10 - விப 20:12;21:17; லேவி 20:9; இச 5:16.
[6] 7:16 - இவ்வசனம் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.
[7] 7:18,19 - திப 10:9-16; கொலோ 2:16,21,22.
[8] 7:32 - மாற் 6:5; 8:23; 1 திமொ 4:14,15
[9] 7:35,36 - மத் 8:3,4.
[10] 7:37 - மத் 9:33; 15:31.