நீர்க்கோவை நோயாளி குணமடைதல்
1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு
உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
2 அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.
3 இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து,
"ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?"
என்று கேட்டார்.
4 அவர்கள் அமைதியாய் இருந்தனர்.
இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.
5 பிறகு அவர்களை நோக்கி,
"உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால்
ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?"
என்று கேட்டார். [1]
6 அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.
விருந்தினருக்கும் விருந்தளிப்போருக்கும் ஒரு போதனை
7 விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு
அவர்களுக்குக் கூறிய அறிவுரை:
8 "ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால்,
பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள்.
ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.
9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில்,
'இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார்.
அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.
10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள்.
அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம்,
'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது
உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.
[2]
11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்;
தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்."
[3]
12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு,
"நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது
உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ,
செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம்.
அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம்.
அப்பொழுது அதுவே உமக்கு கைம்மாறு ஆகிவிடும்.
13 மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது
ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும்
கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.
[4]
14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர்.
ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை.
நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்"
என்று கூறினார்.
பெரிய விருந்து உவமை
(மத் 22:1-10)
15 இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம்,
"இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்" என்றார். [5]
16 இயேசு அவரிடம் கூறியது:
"ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார்.
17 விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி,
'வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது' என்று சொன்னார்.
18 அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்.
முதலில் ஒருவர், 'வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்;
அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும்.
என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார்.
19 'நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்;
அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார் வேறொருவர்.
20 'எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று;
ஆகையால் என்னால் வர முடியாது' என்றார் மற்றொருவர்.
21 பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார்.
வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம்,
'நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று
ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர்,
கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்', என்றார்.
22 பின்பு பணியாளர், 'தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று;
இன்னும் இடமிருக்கிறது என்றார்.
23 தலைவர் தம் பணியாளரை நோக்கி, '
'நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய்,
எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும்.
24 அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச்
சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்' என்றார்."
இயேசுவின் சீடர் யார்?
(மத் 10:37-38)
25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர்.
அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:
26 "
என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி,
பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும்,
ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால்,
அவர் என் சீடராயிருக்க முடியாது. [6]
27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர்
எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.
[7]
28 "உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால்,
முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து,
அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?
29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு
அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,
30 'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே!
31 "வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர்,
இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப்
பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று
முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?
32 எதிர்க்க முடியாதெனில்,
அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி,
அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?
33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும்
என் சீடராய் இருக்க முடியாது.
உவர்ப்பற்ற உப்பு
(மத் 5:13; மாற் 9:50)
34 "உப்பு நல்லது; ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால்
எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்?
35 அது நிலத்துக்கோ எருக்குழிக்கோ பயனற்றது.
அது வெளியே கொட்டப்படும்.
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்".
- குறிப்புகள்
[1] 14:5 - மத் 12:11; லூக் 13:15; யோவா 7:23.
[2] 14:8-10 - நீமொ 25:6,7; மத் 23:6.
[3] 14:11 - மத் 23:12; லூக் 18:14.
[4] 14:13 - நீமொ 22:9.
[5] 14:15 - மத் 8:11.
[6] 14:26 - மத் 10:37.
[7] 14:27 - மத் 10:38; 16:24; மாற் 8:34; லூக் 9:23.