ஓய்வுநாளில் கதிர் கொய்தல்
(மத் 12;1-8; மாற் 2:23-28)
1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்தது.
அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். [1]
2 பரிசேயருள் சிலர்,
"ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்று கேட்டனர்.
3 அதற்கு இயேசு மறுமொழியாக,
"தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த போது,
தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா?
4 அவர் இறை இல்லத்திற்குள் சென்று,
குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக்கூடாத
அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித்
தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?"
என்று கூறினார். [2] [3]
5 மேலும் அவர்களிடம்,
"ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே"
என்றார்.
கை சூம்பியர் ஓய்வுநாளில் நலமடைதல்
(மத் 12:9-14; மாற் 3:1-6)
6 மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார்.
அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.
7 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன்,
ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று
கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்.
8 இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து,
கை சூம்பியவரை நோக்கி,
"எழுந்து நடுவே நில்லும்!"
என்றார்.
அவர் எழுந்து நின்றார்.
9 இயேசு அவர்களை நோக்கி,
"உங்களிடம் ஒன்று கேட்கிறேன்:
ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா?
உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?"
என்று கேட்டார்.
10 பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு,
"உமது கையை நீட்டும்!"
என்று அவரிடம் கூறினார்.
அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது.
11 அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம்
என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.
பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தல்
(மத் 10:1-4; மாற் 3:13-19)
12 அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார்.
அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்.
13 விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு
அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து
அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.
14 அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்,
அவருடைய சகோதரர் அந்திரேயா,
யாக்கோபு, யோவான் பிலிப்பு, பர்த்தலமேயு,
15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு,
தீவிரவாதி எனப்பட்ட சீமோன்,
16 யாக்கோபின் மகன் யூதா,
துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.
திரளான மக்களுக்குப் பணிபுரிதல்
(மத் 4:23-25)
17 இயேசு அவர்களுடன் இறங்கி வந்து
சமவெளியான ஓரிடத்தில் நின்றார்.
பெருந்திரளான அவருடைய சீடர்களும்
யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும்
தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த
பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.
18 அவர் சொல்வதைக் கேட்கவும்
தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள்.
தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.
19 அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு
அனைவர் பிணியையும் போக்கியதால்,
அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர். [4]
சமவெளிப் பொழிவு
பேறுபெற்றோரும் கேடுற்றோரும்
(மத் 5:1-12)
20 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை:
"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.
21 இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.
[5]
22 மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து,
நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.
[6]
23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்;
ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.
[7]
24 ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.
[8]
25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.
26 மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு!
ஏனெனில் அவர்களின் மூதாதையரும்
போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.
பகைவரிடம் அன்பு காட்டுதல்
(மத் 5:38-48; 7:12அ)
27 "நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்:
உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்;
உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.
28 உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்;
உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
[9]
29 உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு
மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர்
உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்;
30 உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள்.
உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து
அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.
31 "பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ,
அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
32 உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால்
உங்களுக்கு வரும் நன்மை என்ன?
பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.
33 உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால்
உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே.
[10]
34 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து
நீங்கள் கடன் கொடுத்தால்
உங்களுக்கு வரும் நன்மை என்ன?
ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்குடன்
பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
35 நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்;
அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;
திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்.
அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும்.
நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள்.
ஏனெனில் அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.
36 உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல
நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.
தீர்ப்பிடுதல்
(மத் 7:1-5)
37 "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்;
அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்.
மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்;
அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.
மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.
38 கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்;
அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து
உங்கள் மடியில் போடுவார்கள்.
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ
அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."
39 மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது:
"பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு
வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?
[11]
40 சீடர் குருவைவிட மேலானவர் அல்ல.
ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.
[12]
41 "நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல்
உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும்
துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?
42 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே
நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு
உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம்,
'உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?' என்று
எப்படிக் கேட்க முடியும்?
வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும்
மரக் கட்டையை எடுத்து எறியுங்கள்.
அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின்
கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.
மரமும் கனியும்
(மத் 7:17-20; 12:34-35)
43 "கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை;
நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.
44 ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்.
ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை;
முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.
45 நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து
நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர்.
தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர்.
உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
இருவகை அடித்தளங்கள்
(மத் 7:24-27)
46 "நான் சொல்பவற்றைச் செய்யாது
என்னை, 'ஆண்டவரே, ஆண்டவரே' என ஏன் கூப்பிடுகிறீர்கள்?
[13]
47 என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு,
அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என
உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்;
48 அவர் ஆழமாய்த் தோண்டி,
பாறையின் மீது அடித்தளம் அமைத்து,
வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார்.
வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து
அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை;
ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.
49 நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ,
அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார்.
ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது;
அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது."
- குறிப்புகள்
[1] 6:1 - இச 23:25.
[2] 6:3,4 - 1 சாமு 21:1-6.
[3] 6:4 - லேவி 24:9.
[4] 6:19 - மாற் 5:30.
[5] 6:20,21 - மத் 5:1-5.
[6] 6:22 - மத் 5:11,12; 1 பேது 4:14.
[7] 6:23 - 2 குறி 36:16; திப 7:52.
[8] 6:24 - லூக் 16:25.
[9] 6:28 - 1 பேது 3:9.
[10] 6:33 - லூக் 14:12-14.
[11] 6:39 - மத் 15:14.
[12] 6:40 - மத் 10:24,25; யோவா 13:16; 15:20.
[13] 6:46 - மத் 7:21.