இயேசுவின் வேண்டல்
1 இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது:
"தந்தையே, நேரம் வந்து விட்டது.
உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்.
2 ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும்
அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்.
[1]
3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும்
நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.
[2]
4 நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து
நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்.
[3]
5 தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர்.
இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.
6 நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு
நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன்.
உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர்.
அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.
7 நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது
இப்போது அவர்களுக்குத் தெரியும்.
8 ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன்.
அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை
உண்மையில் அறிந்துகொண்டார்கள்.
நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.
9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன்.
உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன்.
அவர்கள் உமக்கு உரியவர்கள்.
10 "என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே.
அவர்கள் வழியாய் நான் மாட்சி பெற்றிருக்கிறேன்.
11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள்.
நான் உம்மிடம் வருகிறேன்.
தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி
நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.
12 நான் அவர்களோடு இருந்தபோது
நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்;
நன்கு பாதுகாத்தேன்.
அவர்களுள் எவரும் அழிவுறவில்லை.
மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.
[4]
13 "இப்போது உம்மிடம் வருகிறேன்.
என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி
நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன்.
14 உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன்.
நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல்,
அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.
15 அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை;
தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.
[5]
16 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல்
அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்.
உமது வார்த்தையே உண்மை.
18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல,
நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.
[6]
19 அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி
அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.
[7]
20 "அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை;
அவர்களுடைய வார்த்தையின் வழியாக
என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.
[8]
21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!
தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்
அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!
இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.
22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு
நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.
23 இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால்
அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக.
இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும்
நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல்
அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்.
[9]
24 "தந்தையே, உலகம் தோன்றுமுன்னே
நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர்.
நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு
அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே
என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
[10]
25 நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை;
ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன்.
நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.
[11]
26 நான் அவர்களோடு இணைந்திருக்கவும்
நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும்
உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.
- குறிப்புகள்
[1] 17:2 - 1 யோவா 2:25.
[2] 17:3 - எரே 24:7; எசே 36:25-28.
[3] 17:4 - 1 யோவா 5:20,21.
[4] 17:12 - திபா 41:9; மத் 26:24; யோவா 13:18; திப 1:16.
[5] 17:15 - மத் 6:13; 1 கொரி 5:10; 1 யோவா 5:18; 1 பேது 1:22.
[6] 17:18 - யோவா 4:37; 20:21.
[7] 17:19 - 1 தெச 4:7; எபி 2:11.
[8] 17:20 - யோவா 14:20; திப 4:32.
[9] 17:23 - யோவா 15:9.
[10] 17:24 - 1 தெச 1:12.
[11] 17:25 - 1 யோவா 3:1.