கானாவில் திருமணம்
1 மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது.
இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.
2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.
3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே
இயேசுவின் தாய் அவரை நோக்கி,"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார்.
4 இயேசு அவரிடம், "அம்மா,
[1] அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்?
எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.
5 இயேசுவின் தாய் பணியாளரிடம்,
"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார்.[2]
6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன.
அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.
7 இயேசு அவர்களிடம்,
"இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்"
என்று கூறினார்.
அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.
8 பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்"
என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார்.
அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை;
தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.
ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,
10 "எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்;
யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர்.
நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?" என்று கேட்டார்.
11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம்.
இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது.
இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார்.
அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
12 இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும்
அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர். [3]
கோவிலைத் தூய்மைப்படுத்துதல்
(மத் 21:12-13; மாற் 11:15-17; லூக் 19:45-46)
13 யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால்
இயேசு எருசலேமுக்குச் சென்றார்;
14 கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும்
அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;
15 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி,
அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்;
ஆடு மாடுகளையும் விரட்டினார்;
நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு
மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
16 அவர் புறா விற்பவர்களிடம்,
"இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்;
என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்"
என்று கூறினார்.
17 அப்போது அவருடைய சீடர்கள்,
"உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்" என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். [4]
18 யூதர்கள் அவரைப் பார்த்து,
"இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு
நீர் காட்டும் அடையாளம் என்ன?" என்று கேட்டார்கள்.
19 இயேசு மறுமொழியாக அவர்களிடம்,
"இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்"
என்றார். [5]
20 அப்போது யூதர்கள்,
"இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே!
நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?" என்று கேட்டார்கள்.
21 ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.
22 அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது
அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து
மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
இயேசு அனைவரையும் அறிபவர்
23 பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில்
அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர்.
24 ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை;
ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும்.
25 மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை.
ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.- குறிப்புகள்
[1] 2:4 - "அம்மா" என்னும் சொல் தாய் என்னும் பொருளில் அல்ல, பெண்களை மதிப்புடன் குறிப்பிடும் பொருளில் இங்குக் கையாளப்படுகிறது.
[2] 2:5 - தொநூ 41:55.
[3] 2:12 - மத் 4:13.
[4] 2:17 - திபா 69:9.
[5] 2:19 - மத் 26:61; 27:40; மாற் 4:58; 15:29.