இயேசு உயிர்த்தெழுதல்
(மத் 28:1-10; மாற் 16:1-8; லூக் 24:1-12)
1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில்
இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்;
கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.
2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும்
இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து,
"ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர்;
அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!" என்றார்.
3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.
4 இருவரும் ஒருமித்து ஓடினர்.
மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.
5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்;
ஆனால் உள்ளே நுழையவில்லை.
6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார்.
நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார்.
அங்குத் துணிகளையும்,
7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார்.
அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல்
ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. [1]
8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த
மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.
9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை
அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை. [2]
10 பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.
இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றுதல்
(மாற் 16:9-11)
11 மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்;
அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார்.
12 அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார்.
இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில்
ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
13 அவர்கள் மரியாவிடம், "அம்மா, ஏன் அழுகிறீர்?" என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம், " என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்;
அவரை எங்கே வைத்தனரோ எனக்குக் தெரியவில்லை" என்றார்.
14 இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது
இயேசு நிற்பதைக் கண்டார்.
ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. [3]
15 இயேசு அவரிடம், "ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?"
என்று கேட்டார்.
மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம்,
"ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால்
எங்கே வைத்தீர் எனச் சொல்லும்.
நான் அவரை எடுத்துச் செல்வேன்" என்றார்.
16 இயேசு அவரிடம், "மரியா"
என்றார்.
மரியா திரும்பிப் பார்த்து, "ரபூனி" என்றார்.
இந்த எபிரேயச் சொல்லுக்கு 'போதகரே' என்பது பொருள்.
17 இயேசு அவரிடம், "
என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே.
நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை.
நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம்,
'என் தந்தையும் உங்கள் தந்தையும்
என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்" என்றார்.
18 மகதலா மரியா சீடரிடம் சென்று,
"நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்;
தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16-20; மாற் 16:1-18; லூக் 24:36-40)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை.
யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள்
தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்.
அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று,
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!"
என்று வாழ்த்தினார்.
20 இவ்வாறு சொல்லிய பின் அவர்
தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார்.
ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி,
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்"
என்றார். [4]
22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி,
"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
[5]
23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்.
எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா"
என்றார். [6]
இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா,
இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.
25 மற்றச் சீடர்கள் அவரிடம்,
"ஆண்டவரைக் கண்டோம்" என்றார்கள்.
தோமா அவர்களிடம்,
"அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து,
அதில் என் விரலை விட்டு,
அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார்.
26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள்
மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள்.
அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார்.
கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று,
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!"
என்று வாழ்த்தினார்.
27 பின்னர் அவர் தோமாவிடம்,
"இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு.
உன் கையை நீட்டி என் விலாவில் இடு.
ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்"
என்றார்.
28 தோமா அவரைப் பார்த்து,
"நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார்.
29 இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்"
என்றார். [7]
முடிவுரை: நூலின் நோக்கம்
30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு
தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார்.
அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.
31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும்,
நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே
இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன. [8]- குறிப்புகள்
[1] 20:7 - யோவா 11:44; 19:40.
[2] 20:9 - யோவா 14:26.
[3] 20:14 - லூக் 24:16.
[4] 20:21 - மத் 28:19; மாற் 16:15; லூக் 24:47.
[5] 20:22 - திப 1:8.
[6] 20:23 - மத் 16:19; 18:18.
[7] 20:29 - லூக் 1:45; யோவா 4:48.
[8] 20:31 - 1 யோவா 5:13; திப 3:16.