1. முன்னுரை
தூய ஆவியைப் பற்றிய வாக்குறுதி
1 தெயோபில் அவர்களே,
இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு
அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்.
2 விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து
எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.
3 இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி,
இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்;
பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.
4 அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம்,
"நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம்.
என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். [1]
5 யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்.
நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்" என்று கூறினார். [2]
இயேசுவின் விண்ணேற்றம்
6 பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம்,
"ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?"
என்று கேட்டார்கள்.
7 அதற்கு அவர்,
"என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும்
காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல;
8 ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது
நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று
எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும்
உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார். [3]
9 இவற்றைச் சொன்னபின்பு,
அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. [4]
10 அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, [5]
11 "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்?
இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா?
அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" என்றனர்.
2. எருசலேமில் சான்று பகர்தல்
மத்தியா தெரிந்தெடுக்கப்படுதல்
12 பின்பு அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் [6] உள்ளது.
13 பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா,
பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன்,
யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின்
தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். [7]
14 அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும்,
அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து
ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.
15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள்
ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது
பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது:
16 "அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து
தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த
மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.
17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு
நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.
18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்குக் கிடைத்த
கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான்.
பின்பு அவன் தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின. [8]
19 இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது.
அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் "அக்கலிதமா" என வழங்குகின்றார்கள். அதற்கு "இரத்தநிலம்" என்பது பொருள்.
20 திருப்பாடல்கள் நூலில்,
'அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!"
என்றும்
"அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!"
என்றும் எழுதப்பட்டுள்ளது. [9]
21-22 ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க,
அவர் நம்மிடையே செயல்பட்டக் காலத்தில்
நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள
நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று.
யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல்
ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை
அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்." [10]
23 அத்தகையோருள், இருவரை முன்னிறுத்தினார்கள்.
ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா.
இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு.
மற்றவர் மத்தியா.
24 பின்பு அவர்கள் அனைவரும்,
"ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே,
யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று
தனக்குரிய இடத்தை அடைந்துவிட்டான். [11]
25 அந்த யூதாசுக்குப் பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என
இந்த இருவருள் ஒருவரை எங்களுக்கு காண்பியும்"
என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.
26 அதன்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள்.
சீட்டு மத்தியா பெயருக்கு விழவே
அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.- குறிப்புகள்
[1] 1:1-4 - லூக் 1:1-4; லூக் 24:29,51; 1 திமொ 3:16.
[2] 1:5 - மத் 3:11; மாற் 1:8; லூக் 3:16; யோவா 1:33.
[3] 1:8 - எசா 43:10; மத் 28:19; மாற் 16:15; லூக் 24:47.
[4] 1:9 - மாற் 16:19; லூக் 24:50,51.
[5] 1:10 - 1 பேது 3:22.
[6] 1:12 - ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலை.
[7] 1:13 - லூக் 6:14-16.
[8] 1:18 - மத் 27:3-10.
[9] 1:20 - திபா 69:25; யோவா 17:12; திபா 109:8.
[10] 1:22 - மத் 3:16; மாற் 1:9; லூக் 3:21.
[11] 1:24 - எரே 11:20; திவெ 2:23.