Home

திருவிவிலியம்

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 4

ஆபிரகாம் ஓர் எடுத்துக்காட்டு


1 அப்படியானால், இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்?
2 தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு; ஆனால் கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை.
3 ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? "ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்." [1]
4 வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவதில்லை; அது அவர்கள் உரிமை.
5 தம் செயல்கள்மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்றில்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருகிறார்.
6 அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று தாவீது கூறியிருக்கிறார்:
7 "எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றவர். [2] 8 ஆண்டவர் எந்த மனிதரின் தீச் செயலைக் கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறு பெற்றவர்."
9 பேறுபெற்றோர் விருத்தசேதனம் செய்து கொண்டோர் மட்டுமா? செய்யாதோரும் கூடவா? "ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்; அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்"

என்றோமே.

10 அவர் எந்த நிலையில் இருந்தபோது கடவுள் அவ்வாறு கருதினார்? விருத்தசேனம் செய்துகொண்ட நிலையிலா? செய்துகொள்ளாத நிலையிலா? விருத்தசேதனம் செய்துகொண்ட நிலையில் அல்ல; செய்து கொள்ளாத நிலையில்தான்.
11 விருத்தசேதனம் இல்லாத நிலையிலேயே அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளுக்கு ஏற்புடையவர் என்று கருதப்பட்டார்; அதை உறுதிப்படுத்தும் அடையாளமாக விருத்தசேதனத்தைப் பெற்றார். இவ்வாறு விருத்தசேதனம் இல்லாதிருந்தும், கடவுள்மீது நம்பிக்கை கொள்வதால் அவருக்கு ஏற்புடையவர்களாகக் கருதப்படும் அனைவருக்கும் அவர் தந்தையானார். [3]
12 அதேபோல, விருத்தசேதனம் பெற்றிருந்தும், அதுவே போதுமென்றிருந்திடாமல் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும் அவர் தந்தையானார்; எப்படியெனில், நம் தந்தையாம் ஆபிரகாம் விருத்தசேதனம் பெறுமுன்பே நம்பிக்கை கொண்டிருந்ததுபோல, இவர்களும் நம்பிக்கை கொண்டவர்களாய் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார்கள்.

நம்பினோர்க்கே வாக்குறுதி பயன்தரும்


13 உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது. [4]
14 ஏனெனில் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குத்தான் அந்த உரிமைச் சொத்து கிடைக்கும் எனின், நம்பிக்கை கொள்வது பொருளற்றதாகும்; அந்த வாக்குறுதியும் செல்லாததாகும். [5]
15 திருச்சட்டம் இறைவனின் சினத்தை வருவிக்கிறது. சட்டம் இல்லையெனில் அதை மீறவும் இயலாது. [6]
16 ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. [7]
17 ஏனெனில் "எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். [8]
18 "உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்" என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார். [9]
19 தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆகிவிட்டதால் தமது உடலும் சாராவுடைய கருப்பையும் செத்தவைபோல் ஆற்றலற்றுப் போய்விட்டதை எண்ணிப் பார்த்தபோதுகூட, அவர் நம்பிக்கையில் உறுதி தளரவில்லை; [10]
20 கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவே இல்லை; நம்பிக்கையில் அவர் மேலும் வலுப் பெற்றார்; கடவுளைப் பெருமைப்படுத்தினார்.
21 தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார்.
22 ஆகவே "அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்."
23 "நீதியாகக் கருதினார்" என்று எழுதியுள்ளது அவரைமட்டும் குறிக்கவில்லை;
24 நம்மையும் குறிக்கின்றது; இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் அவ்வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம்.
25 நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச்செய்தார். [11]
குறிப்புகள்

[1] 4:3 - தொநூ 15:6; கலா 3:6; யாக் 2:23.
[2] 4:7 - திபா 32:1,2.
[3] 4:11 - தொநூ 17:10; யோவா 7:22.
[4] 4:13 - தொநூ 17:4-6; 22:17-18; கலா 3:29.
[5] 4:14 - கலா 3:18.
[6] 4:15 - கலா 3:10.
[7] 4:16 - கலா 3:7.
[8] 4:17 - தொநூ 17:5.
[9] 4:18 - தொநூ 15:5.
[10] 4:19 - தொநூ 17:17.
[11] 4:25 - எசா 53:4,5.



Back Top Forward