மண்பாண்டத்தில் செல்வம்
1 கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம்.
ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம்.
2 மக்கள் மறைவாகச் செய்யும் வெட்கக் கேடான செயல்களை
நாங்கள் தவிர்த்து விட்டோம்.
எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை.
கடவுளுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை;
மாறாக உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கிறோம்.
இவ்வாறு கடவுளின் முன்னிலையில் நல்ல மனச்சான்று கொண்ட அனைவருக்கும்
நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று அளிக்கிறோம். [1]
3 நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி அழிவுறுவோருக்கே அன்றி
வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை.
4 இவ்வுலகின் தெய்வம் நம்பிக்கை கொண்டிராதோரின்
அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது.
எனவே அவர்கள் கடவுளின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின்
மாட்சி பொருந்திய நற்செய்தி ஒளியைக் காணமுடிவதில்லை. [2]
5 நாங்கள் எங்களைப் பற்றி அல்ல,
இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்;
அவரே ஆண்டவர் எனப்பறைசாற்றி வருகிறோம்.
நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே.
6 "இருளிலிருந்து ஒளி தோன்றுக!" என்று சொன்ன கடவுளே
எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார்.
அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே. [3]
7 இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம்.
இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை,
அது கடவுளுக்குகே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.
8 நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும்
மனம் உடைந்து போவதில்லை;
குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை;
9 துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை;
வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை.
10 இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு
நாங்கள் எங்குச் சென்றாலும்
அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.
11 இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு
உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு
எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம்.
12 சாவின் ஆற்றல் எங்களிலும்
வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது.
13 "நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்"
என்று மறைநூலில் எழுதியுள்ளது.
அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்;
ஆகவே பேசுகிறோம். [4]
14 ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே
எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்;
உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும்.
15 இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன.
இறையருள் பெறுவோரின் தொகை பெருகப்பெருக
அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும்.
இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.
நம்பிக்கையோடு வாழ்தல்
16 எங்கள் உடல் அழிந்து கொண்டிருந்தாலும்
எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப் பெற்று வருகிறது.
எனவே நாங்கள் மனந்தளருவதில்லை.
17 நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை.
அவை சிறிது காலம்தான் நீடிக்கும்.
ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விழைவிக்கின்றன.
அம்மாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். [5]
18 நாங்கள் காண்பவற்றையல்ல,
நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம்.
காண்பவை நிலையற்றவை;
காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.- குறிப்புகள்
[1] 4:2 - 1 தெச 2:4,5.
[2] 4:4 - எபே 2:2.
[3] 4:6 - தொநூ 1:3; யோவா 8:12.
[4] 4:13 - திபா 116:10.
[5] 4:17 - மத் 5:11,12.