சாவின் நிலையிலிருந்து வாழ்வின் நிலையடைதல்
1 உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் முன்னிட்டு
நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள்.
2 அப்பொழுது நீங்கள் இவ்வுலகப்போக்கின்படி,
வான்வெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள்.
கடவுளுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப்
பணிந்து நடந்தீர்கள்.
3 இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லாரும் இருந்தோம்.
நம்முடைய ஊனியல்பின் தீயநாட்டங்களின்படி வாழ்ந்து,
உடலும் மனமும் விரும்பியவாறு செயல்பட்டு,
மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக் கடவுளின் சினத்துக்கு ஆளானோம்.
4 ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர்.
அவர் நம்மீது மிகுந்த அன்புகொண்டுள்ளார்.
5 குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம்
அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். [1]
நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.
6 இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும்
விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார்.
7 கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும்
அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும்
இனிவரும் காலங்களிலும் எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்.
8 நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள்.
இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை.
9 இது மனிதச் செயல்களால் ஆனது அல்ல.
எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது.
10 ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு;
நற்செயல்கள் புரிவதற்கென்றே
கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம்.
இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி
கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.
கிறிஸ்து அருளும் ஒற்றுமை
11 எனவே, பிறப்பால் பிற இனத்தாராய் இருந்த நீங்கள்,
உங்கள் முன்னைய நிலையை நினைவில் கொள்ளுங்கள்.
உடலில் கையால் விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்
உங்களை விருத்தசேதனம் செய்யாதோர் எனக் கூறி இகழ்ந்தார்கள்.
12 அக்காலத்தில் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும்,
இஸ்ரயேலரின் சமுதாயத்துக்குப் புறம்பானவர்களாகவும்,
வாக்குறுதியைக் கொண்டிருந்த உடன்படிக்கைக்கு அன்னியர்களாகவும்,
எதிர்நோக்கு இல்லாதவர்களாகவும் இவ்வுலகில் இருந்தீர்கள்.
13 ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள்
இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து,
அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்.
14 ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர்.
அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை,
தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து,
அவர்களை ஒன்றுபடுத்தினார்.
15 பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார்.
இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து
அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். [2]
16 தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார்.
சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக்
கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். [3]
17 அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும்,
அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். [4]
18 அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம்
ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.
19 எனவே இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல.
இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
20 திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும்,
கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.
21 கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி,
ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது.
22 நீங்களும் அவரோடு இணைந்து
தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள். [5]
- குறிப்புகள்
[1] 2:5 - கொலோ 2:13.
[2] 2:15 - கொலோ 2:14.
[3] 2:16 - கொலோ 1:20.
[4] 2:17 - எசா 57:19.
[5] 2:22 - 1 பேது 2:5.