1. முன்னுரை
வாழ்த்து
1 தந்தையாம் கடவுளோடும்
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற
தெசலோனிக்க சபைக்கு,
பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது:
உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! [1]
தெசலோனிக்கரின் நம்பிக்கையும் முன்மாதிரியும்
2 நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது
இடைவிடாது உங்களை நினைத்து
உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்.
3 செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும்,
அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும்,
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள
உங்கள் மனவுறுதியையும்
நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூருகிறோம்.
4 கடவுளின் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
5 ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி,
தூய ஆவி தரும் வல்லமையோடும்
மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டுவந்தோம்.
உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே
எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும்.
6 மிகுந்த வேதனை நடுவிலும்
நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள்.
இவ்வாறு எங்களைப்போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள். [2]
7 மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள,
நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானீர்கள்.
8 எப்படியெனில் ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது.
கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது
மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல,
எல்லா இடங்களிலும் தெரியவந்துள்ளது.
எனவே இதைப்பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
9 நாங்கள் உங்களிடம் வந்தபோது
எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள்.
நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு,
உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக்
கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள்.
10 இவ்வாறு நீங்கள் வானினின்று வரும்
அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்.
அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர்.
இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.- குறிப்புகள்
[1] 1:1 - திப 17:1.
[2] 1:6 - திப 17:5-9.