1. முன்னுரை
வாழ்த்து
1 சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு,
கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு
வாழ்த்துக் கூறி எழுதுவது: [1]
2. சோதனைகள்
நம்பிக்கையும் ஞானமும்
2 என் சகோதர சகோதரிகளே,
பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள்
மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள்.
3 உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும்.
4 உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும்.
அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.
5 உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்;
அப்போது அவரும் ஞானத்தைக் கொடுப்பார்.
அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்.
6 ஆனால் நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும்.
ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள்.
7-8 எனவே இத்தகைய இருமனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள்
ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும்.
ஏழ்மையும் செல்வமும்
9 தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள்
தாங்கள் உயர்வுபெறும்போது மகிழ்ச்சியடைவார்களாக!
10 செல்வச் செழிப்பில் இருப்பவர்கள்
தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக!
ஏனெனில் செல்வர்கள் புல்வெளிப் பூவைப்போல மறைந்தொழிவார்கள்.
11 கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம்.
அதன் பூ வதங்கி விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும்.
அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர். [2]
கடவுளும் சோதனையும்
12 சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்.
ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது,
தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த
வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்.
13 சோதனை வரும்போது,
'இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது' என்று யாரும் சொல்லக்கூடாது.
ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை.
அவரும் எவரையும் சோதிப்பதில்லை.
14 ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர்.
அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது.
15 பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது.
பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது.
16 என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம்.
17 நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம்,
ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன.
அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை;
அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல.
18 தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி
உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.
3. அறிவுரைகளும் எச்சரிக்கைகளும்
இறைவார்த்தையைக் கேட்டலும் செயல்படுதலும்
19 என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்:
ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும்
பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்டவேண்டும்.
20 ஏனெனில் மனிதரின் சினம்
கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது.
21 எனவே எல்லா வகையான அழுக்கையும்,
உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி,
உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
அதுவே உங்களை மீட்க வல்லது.
22 இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து
உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்.
அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.
23-24 ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர்,
கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்று
உடனே தாம் எவ்வாறு இருந்தார் என்பதை மறந்து விடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவர்.
25 ஆனால் நிறைவான விடுதலையளிக்கக் கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து
அதைத் தொடர்ந்து கற்போர் தாம் கேட்பதை மறந்துவிடுவதில்லை;
அவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்;
தம் செயல்களால் பேறு பெற்றவர் ஆவார்கள்.
26 தாம் சமயப் பற்றுடையோர் என எண்ணிக்கொண்டிருப்போர்
தம் நாவை அடக்காமலிப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்.
இத்தகையோருடைய சமயப் பற்று பயனற்றது.
27 தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும்
மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில்,
துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும்
உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.- குறிப்புகள்
[1] 1:1 - மத் 13:55; மாற் 6:3; திப 15:13; கலா 1:19.
[2] 1:10,11 - எசா 40:6-7.