உலகத்தோடு நட்பு
1 உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன?
உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா?
2 நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்;
போராசை கொள்கிறீர்கள்;
அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள்.
அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை. நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை.
3 நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை?
ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்;
சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.
4 விபசாரர் போல செயல்படுவோரே,
உலகத்தோடு நட்புக்கொள்வது கடவுளைப் பகைப்பது
என்பது உங்களுக்குத் தெரியாதா?
உலகுக்கு நண்பராக விரும்பும் எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார்.
5-6 அல்லது "மனித உள்ளத்திற்காகக் கடவுள் பேராவலோடு ஏங்குகிறார். [1]
அதற்கு அவர் அளிக்கும் அருளோ மேலானது என
மறைநூல் சொல்வது வீணென நினைக்கிறீர்களா?
ஆகவே,
"செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்" [2]
என்று மறைநூல் உரைக்கிறது.
7 எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்;
அலகையை எதிர்த்து நில்லுங்கள்.
அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்.
8 கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார்.
பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள்.
இரு மனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள்.
9 உங்கள் நிலையை அறிந்து, துயருற்றுப் புலம்பி அழுங்கள்.
உங்கள் சிரிப்பு புலம்பலாகவும், மகிழ்ச்சி ஆழ் துயரமாகவும் மாறட்டும்.
10 ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்.
பிறரிடம் குற்றம் காண்போருக்கு எச்சரிக்கை
11 சகோதர சகோதரிகளே,
உங்களுள் ஒருவர் மற்றவரைப் பழித்துரைக்க வேண்டாம்.
தம் சகோதரர் சகோதரிகளைப் பழித்துரைப்போர்
அல்லது அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்போர்
திருச்சட்டத்தைப் பழித்துரைக்கின்றனர்;
அச்சட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கின்றனர்.
சட்டத்துக்கு எதிராக நீங்கள் தீர்ப்பு அளிக்கும்போது
நீங்கள் அதைக் கடைப்பிடிப்பவராக அல்ல,
மாறாக அதற்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கும் நடுவர்களாக ஆகிவருகிறீர்கள்.
12 திருச்சட்டத்தைக் கொடுத்தவரும் தீர்ப்பு அளிப்பவரும் ஒருவரே.
அவரே மீட்கவும் அழிக்கவும் வல்லவர்.
அவ்வாறிருக்க உங்களை அடுத்திருப்பவருக்குத் தீர்ப்பளிக்க நீங்கள் யார்?
வீம்பு பேசுவோருக்கு எச்சரிக்கை
13 "இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய்
அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்;
பணம் ஈட்டுவோம்" [3]
எனச் சொல்லுகிறவர்களே, சற்றுக் கேளுங்கள்.
14 நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே!
நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள்.
15 ஆகவே அவ்வாறு சொல்லாமல்,
"ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடிருப்போம்;
இன்னின்ன செய்வோம்" என்று சொல்வதே முறை.
16 இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள்.
இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது.
17 நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும்
அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.- குறிப்புகள்
[1] 4:5 - இச் சொற்றொடரை “நம் முள் குடியிருக்கும் ஆவியார் பேரார்வத்துடன் நம் மீது ஏக்கமாயிருக்கிறார் “ எனவும் “மனித உள்ளம் பொறாமையால் துடிக்கிறது எனவும் மொழி பெயர்க்கலாம்.
[2] 4:6 - நீமொ 3:34
[3] 4:13 - நீமொ 27:1.