மூப்பர்களுக்கும் மக்களுக்கும் அறிவுரை
1 கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும்,
வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்கு கொள்ளப் போகிறவனுமாகிய நான்,
உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை:
2 உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்;
கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்;
ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். [1]
3 உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள்.
4 தலைமை ஆயர் வெளிப்படும்போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.
5 இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள்.
ஒருவர் மற்றவரோடு பழகும்போது
எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில்,
"செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்." [2]
6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்;
அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். [3]
7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள்.
ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.
8 அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள்.
உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக்
கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.
9 அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்.
உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள்
உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்
என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?
10 எல்லா அருளும் நிறைந்த கடவுள்,
இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள
உங்களை அழைத்திருக்கிறார்.
சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி,
வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
11 அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.
5. முடிவுரை
இறுதி வாழ்த்து
12 நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச்
சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன்.
உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச்
சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். [4]
13 உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும்,
என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.
14 அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்.
இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!- குறிப்புகள்
[1] 5:2 - யோவா 21:15-17.
[2] 5:5 - நீமொ 3:31.
[3] 5:6 - மத் 23:12; லூக் 14:11; 18:14.
[4] 5:12 - திப 15:22,40.
(பேதுரு எழுதிய முதல் திருமுகம் நிறைவுற்றது)