1. அர்ப்பணம்
1-2 மாண்புமிகு தியோபில் அவர்களே,
நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி
ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்;
தொடக்க முதல் நேரில் கண்டும்
இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர்
நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.
3 அது போலவே நானும்
எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து
நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,
4 அவற்றை ஒழுங்குபடுத்தி
உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
2. குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள்
யோவான் பிறப்பைப் பற்றி முன்னறிவித்தல்
5 யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில்,
அபியா வகுப்பைச் சேர்ந்த
செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார்.
அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. [1]
6 அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள்.
ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக்
குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.
7 அவர்களுக்குப் பிள்ளை இல்லை;
ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார்.
மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.
8 தம்முடைய பிரிவின்முறை வந்தபோது,
செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார்.
9 குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப,
ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச்
சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது.
10 அவர் தூபம் காட்டுகிற வேளையில்
மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.
11 அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர்
தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார்.
12 அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.
13 வானதூதர் அவரை நோக்கி,
"செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது.
உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்;
அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்.
14 நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்.
அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர்.
15 அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்;
திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்;
தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார். [2]
16 அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத்
தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.
17 எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய்
அவருக்கு முன் செல்வார்;
தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்;
நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்;
இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார். [3]
18 செக்கரியா வானதூதரிடம்,
"இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்?
நான் வயதானவன்.
அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார்.
19 அதற்கு வானதூதர் அவரிடம்,
"நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்;
உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். [4]
20 இதோ பாரும்,
உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை.
ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்;
உம்மால் பேசவே இயலாது" என்றார்.
21 மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர்.
திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள்.
22 அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேச முடியாமல் இருந்தார்.
ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என
அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்;
பேச்சற்றே இருந்தார்.
23 அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.
24 அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று
ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார்.
25 "மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க
ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்" என்று
தமக்குள் சொல்லிக்கொண்டார்.
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு
26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக்
கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த
ஒரு கன்னியிடம் அனுப்பினார்.
27 அவர் தாவீது குடும்பத்தினராகிய
யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர்.
அவர் பெயர் மரியா. [5]
28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி,
"அருள்மிகப் பெற்றவரே [6] வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" [7] என்றார்.
29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி,
இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
30 வானதூதர் அவரைப் பார்த்து,
"மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.
31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்;
அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். [8]
32 அவர் பெரியவராயிருப்பார்;
உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை
ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார்.
அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். [9]
34 அதற்கு மரியா வானதூதரிடம்,
"இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்.
35 வானதூதர் அவரிடம்,
"தூய ஆவி உம்மீது வரும்.
உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்.
ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது.
அக்குழந்தை இறைமகன் எனப்படும்.
36 உம் உறவினராகிய எலிசபெத்தும்
தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார்.
கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். [10]
37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.
38 பின்னர் மரியா,
"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
39 அதன்பின் மரியா புறப்பட்டு
யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.
40 அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
41 மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது
அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.
எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.
42 அப்போது அவர் உரத்த குரலில்,
"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்;
உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! [11]
43 என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
44 உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும்
என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார். [12]
மரியாவின் பாடல்
46 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:
47 "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. 48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். 49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். 50-53 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். [13] 54-55 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்".[14] [15]
56 மரியா ஏறக்குறைய மூன்று மாதம்
எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
திருமுழுக்கு யோவானின் பிறப்பு
57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது.
அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
58 ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச்
சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.
59 எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்;
செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.
60 ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து,
"வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார்.
61 அவர்கள் அவரிடம்,
"உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி,
62 "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று
தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.
63 அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி,
"இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார்.
எல்லாரும் வியப்படைந்தனர்.
64 அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது;
அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
65 சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர்.
இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.
66 கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி,
"இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று சொல்லிக் கொண்டார்கள்.
ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
செக்கரியாவின் பாடல்
67 பிள்ளையின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு
உரைத்த இறைவாக்கு:
68 "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். 69-70 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்; 71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். 72-73 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். 74-75 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார். 76-77 குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். 78-79 இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது."
80 குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார்.
இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை
அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.- குறிப்புகள்
[1] 1:5 - 1 குறி 24:10.
[2] 1:15 - எண் 6:3; கலா 1:15.
[3] 1:17 - மலா 4:5,6.
[4] 1:19 - தானி 8:16; 9:21.
[5] 1:27 - மத் 1:18.
[6] 1:28 - "அருள் நிறைந்தவரே வாழ்க" என்று வுல்காத்தா என்னும் இலத்தீன் மொழி பெயர்ப்பில் உள்ளது.
[7] 1:28 - "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்" என்னும் சொற்றொடரும் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.
[8] 1:31 - மத் 1:21.
[9] 1:32,33 - 2 சாமு 7:12,13,16; எசா 9:6,7.
[10] 1:36 - தொநூ 18:14.
[11] 1:42 - லூக் 11:27,28.
[12] 1:45 - யோவா 20:29.
[13] 1:50 - திபா 103:17.
[14] 1:54 - தொநூ 17:17.
[15] 1:46-55 - 1 சாமு 2:1-10; எசா 29:19.