இயேசுவின் பிறப்பு
(மத் 1:18-25)
1 அக்காலத்தில் அகுஸ்து சீசர்
தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.
2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது
முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.
3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.
4-5 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும்,
தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு,
பெயரைப் பதிவு செய்ய,
கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து
யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்.
மரியா கருவுற்றிருந்தார்.
6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.
7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்.
விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
இடையர்களும் வானதூதர்களும்
8 அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி
இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.
9 திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது
ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது;
மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
10 வானதூதர் அவர்களிடம்,
"அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை
உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11 இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்
உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.
12 குழந்தையைத் துணிகளில் சுற்றித்
தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்;
இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.
13-14 உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து,
"உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!"
என்று கடவுளைப் புகழ்ந்தது.
15 வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு,
இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி,
"வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய்
ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்"
என்று சொல்லிக்கொண்டு,
16 விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும்
தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.
17 பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித்
தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.
18 அதைக் கேட்ட யாவரும்,
இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.
19 ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம்
தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
20 இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக்
கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது.
தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு
அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை
நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது
குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க
அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.
23 ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும்
ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று
அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.
24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள்
அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
25 அப்போது எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார்.
அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்;
இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்;
தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.
26 "ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன்
அவர் சாகப்போவதில்லை" என்று
தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.
27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.
திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக்
குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப்
பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.
28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,
29 "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். 30-31 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. [1] 32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை"[2]
என்றார்.
33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி
அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.
34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி,
அதன் தாயாகிய மரியாவை நோக்கி,
"இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும்
எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்;
எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். [3]
35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும்.
உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.
36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய
அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார்.
அவர் வயது முதிர்ந்தவர்;
மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;
37 அவருக்கு வயது எண்பத்து நான்கு.
அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி
அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.
38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து
எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும்
அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.
நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுதல்
39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு
அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய
நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.
40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து
கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
கோவிலில் சிறுவன் இயேசு
41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட
எருசலேமுக்குப் போவார்கள்; [4]
42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது,
வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.
43 விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது,
சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார்.
இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது;
44 பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர்.
ஒருநாள் பயணம் முடிந்தபின்பு
உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்;
45 அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு
எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
46 மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள்.
அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து
அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும்
அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.
47 அவற்றைக் கேட்ட அனைவரும்
அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும்
அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.
48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி,
"மகனே, ஏன் இப்படிச் செய்தாய்?
இதோ பார், உன் தந்தையும் நானும்
உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார். [5]
49 அவர் அவர்களிடம்
"நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்?
நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் [6] என்பது
உங்களுக்குத் தெரியாதா?"
என்றார்.
50 அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
51 பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து
அவர்களுக்குப் பணிந்து நடந்தார்.
அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம்
தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். [7]
52 இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து
கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். [8]- குறிப்புகள்
[1] 2:31 - எசா 52:10.
[2] 2:32 - எசா 42:6; 49:6.
[3] 2:34 - யோவா 19:25-27; எபி 12:3.
[4] 2:41 - விப 12:1-27; இச 16:16.
[5] 2:48 - யோவா 7:15,46.
[6] 2:49 - "தந்தையின்...வேண்டும்" என்னும் சொற்றொடரை "தந்தையின் இல்லத்தில் இருக்க வேண்டும்" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[7] 2:51 - லூக் 2:19; தொநூ 37:11.
[8] 2:52 - நீமொ 3:4.