1 மீண்டும் இயேசு,
"நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்.
கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.
2 தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன.
அப்படி இல்லையெனில்,
"உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்"
என்று சொல்லியிருப்பேனா?[1]
3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின்
திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்.
அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.
[2]
4 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்"
என்றார்.
5 தோமா அவரிடம்,
"ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது.
அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை
நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" என்றார்.
6 இயேசு அவரிடம்,
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே.
[3]
என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.[4]
7 "நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்.
இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள்.
அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்"
என்றார்.[5]
8 அப்போது பிலிப்பு, அவரிடம்,
"ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார்.
9 இயேசு அவரிடம் கூறியது:
"பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும்
நீ
என்னை அறிந்துகொள்ளவில்லையா?
என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்.
அப்படியிருக்க, "தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று நீ எப்படிக் கேட்கலாம்?
10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?
நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை.
என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.
11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்.
நான் சொல்வதை நம்புங்கள்;
என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால்
என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.
12 நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்;
ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்.
ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
[6]
13 நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்.
இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்.
[7]
14 நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.
15 நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.
16 "உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை
உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன்.
17 அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்.
உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது.
ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை.
நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள்.
ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.
18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்.
[8]
19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது.
ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள்.
ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்.
20 நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை
அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார்.
என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார்.
நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்."
[9]
22 யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் - அவரிடம்,
"ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல்
எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?" என்று கேட்டார்.
23 அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்:
"
என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்.
என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார்.
நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.
24 என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.
நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னடையவை அல்ல;
அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.
25 உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
26 என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர்
உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்;
நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.
[10]
27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்;
என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.
நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல.
நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.
[11]
28 "நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்"
என்று
நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே!
நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால்
நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.
ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.
29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே,
இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.
30 இனி நான் உங்களோடு மிகுதியாக பேசப் போவதில்லை;
ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கின்றான்.
அவனுக்கு என் மேல் அதிகாரம் இல்லை.
31 ஆனால் நான் தந்தையின் மீது அன்பு கொண்டுள்ளேன் என்பதையும்
அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும்
உலகு தெரிந்து கொள்ள வேண்டும்.
எழுந்திருங்கள், இங்கிருந்து போவோம்.
[12]- குறிப்புகள்
[1] 14:2 - 1 தெச 4:7.
[2] 14:3 - எபி 6:19,20.
[3] 14:6 - "வழியும் ..... நானே" என்னும் சொற்றொடரை "உண்மைக்கும் வாழ்வுக்கும் வழி நானே" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[4] 14:6 - யோவா 1:4; எபி 10:19,20.
[5] 14:7 - 2 கொரி 4:4..
[6] 14:12 - மத் 21:21.
[7] 14:13 - மத் 7:7-11; திப 3:16; 1 யோவா 3:22
[8] 14:18 - மத் 28:20;
[9] 14:21 - 1 யோவா 2:5; 3:24; 4:21.
[10] 14:26 - எபே 3:5; 1 யோவா 2:20, 27.
[11] 14:27 - உரோ 5:1; எபே 2:14-18.
[12] 14:31 - யோவா 6:38