3. இயேசு கிறிஸ்து மோசேக்கும் யோசுவாவுக்கும் மேலானவர்
இயேசு மோசேயைவிட மேலானவர்
1 எனவே, தூய சகோதர சகோதரிகளே,
விண்ணக அழைப்பில் பங்கு கொண்டவர்களே,
நாம் அறிக்கையிடும் திருத்தூதரும் தலைமைக் குருவுமான
இயேசுவைப்பற்றி எண்ணிப்பாருங்கள்.
2 கடவுளின் குடும்பத்தினர் அனைவரிடையேயும் மோசே நம்பிக்கைக்குரியவராய் இருந்தார்.
அவ்வாறே இவரும் தம்மை நியமித்த கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தார். [1]
3 ஒரு வீட்டைக் கட்டி எழுப்புகிறவருக்கு அவ்வீட்டைவிட அதிக மதிப்பு உண்டு.
அதுபோல, இயேசுவும் மோசேயைவிட அதிக மேன்மை பெறத் தகுதி உடையவராகிறார்.
4 ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல,
எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே.
5 ஊழியன் என்னும் முறையில் மோசே
கடவுளின் குடும்பத்தார் அனைவரிடையேயும் நம்பிக்கைக்குரியவராய் இருந்தார்.
கடவுள் பின்னர் அறிவிக்கவிருந்தவற்றுக்குச்
சான்று பகர்வதே அவரது ஊழியமாயிருந்தது.
6 ஆனால், கிறிஸ்து
மகன் என்னும் முறையில் கடவுளின் குடும்பத்தார்மேல் அதிகாரம் பெற்றுள்ளார்.
துணிவையும் எதிர்நோக்கோடு கூடிய பெருமையையும் நாம் உறுதியாகப் பற்றிக் கொண்டால்
கடவுளுடைய குடும்பத்தாராய் இருப்போம்.
கடவுள் தரும் ஓய்வு
7 எனவே, தூய ஆவியார் கூறுவது:
"இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால்,
8 பாலை நிலத்தில் சோதனை நாளன்று கிளர்ச்சியின்போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9 அங்கே உங்கள் மூதாதையர் நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.
10 எனவே, அத்தலைமுறையினர் மீது வெறுப்புக்கொண்டு, 'எப்போதும் இவர்களது உள்ளம் தவறுகிறது; என் வழிகளை இவர்கள் அறியாதவர்கள்; எனவே நான் சினமுற்று
11 "நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்" என்று ஆணையிட்டுக் கூறினேன்' என்றார் கடவுள்." [2]
12 அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம்,
வாழும் கடவுளை விட்டு விலகும்.
இத்தகைய தீய உள்ளம்
உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
13 உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு,
கடின உள்ளத்தினர் ஆகாதவாறு,
ஒவ்வொரு நாளும் "இன்றே" என எண்ணி,
நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள்.
14 தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை
இறுதிவரை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால்
நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம்.
15 "இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால், கிளர்ச்சியின்போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்."
என்று கூறப்பட்டுள்ளது. [3]
16 அவரது குரலைக் கேட்டும் கிளர்ச்சி செய்தவர்கள் யார்?
மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து வெளியேறினவர்கள் அனைவரும் அல்லவோ?
17 நாற்பது ஆண்டுகள் கடவுள் சீற்றம் கொண்டது யார்மீது?
பாவம் செய்தவர்கள் மீதல்லவோ?
அவர்களுடைய பிணங்கள் பாலை நிலத்தில் விழுந்து கிடந்தன அல்லவோ?
18 "நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்"
என்று யாரைப்பற்றி ஆணையிட்டுக் கூறினார்?
கீழ்ப்படியாதவர்களைப் பற்றியன்றோ? [4]
19 அவர்கள் நம்பிக்கை கொண்டிராததால்தான்
அதை அடைய முடியாமற்போயிற்று என்பது தெரிகிறது.- குறிப்புகள்
[1] 3:2 - எண் 12:7.
[2] 3:7-11 - திபா 95:7-11.
[3] 3:15 - திபா 95:7,8.
[4] 3:16-18 - எண் 14:1-35.