1 ஆதலின், கடவுள் தரும் ஓய்வைப் பெறுவது பற்றி
அவர் அளித்த வாக்குறுதி இன்னும் நிலைத்திருப்பதால்,
உங்களுள் எவரேனும் அதை அடையத் தவறிவிடக்கூடாது என எண்ணுகிறேன்.
இது குறித்து நாம் கவனமாயிருப்போமாக.
2 ஏனெனில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே,
நமக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
ஆயினும் அவர்கள் கேட்ட செய்தி அவர்களுக்குப் பயன் அளிக்கவில்லை;
ஏனெனில் கேட்டவர்கள் அச்செய்தியை நம்பிக்கையோடு கேட்கவில்லை.
3 இந்த ஓய்வைப் பெறுகிறவர்கள் நம்பிக்கையுடன் இருக்கும் நாமே.
இதைக் குறித்தே,
"நான் சினமுற்று, 'நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவேமாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன்"
என எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும் உலகம் தோன்றிய காலத்திலேயே கடவுளுடைய வேலைகள் முடிந்துவிட்டன. [1]
4 ஏனெனில் மறைநூலில் ஓரிடத்தில் ஏழாம்நாள் பற்றி,
"கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்"
என்று கூறப்பட்டுள்ளது.
5 மேலும், மேற்சொன்ன சொற்றொடரில்,
"அவர்கள் நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்"
என்றிருக்கிறது. [2]
6 எனவே, இந்த ஓய்வைப் பெறவேண்டியவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
ஆனால், அந்நற்செய்தியை முன்னர் கேட்டவர்கள்
தங்கள் கீழ்ப்படியாமையால் அந்த ஓய்வைப் பெறவில்லை.
7 ஆகவேதான் முன்பு கூறப்பட்டதுபோலவே,
"இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால் உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்"
என்று நீண்டகாலத்திற்குப் பின்பு
தாவீதின் வழியாக அவர் எடுத்துரைத்து
"இன்று" என வேறொரு நாளைக் குறிப்பிடுகிறார். [3]
8 யோசுவா அவர்களை ஓய்வுபெறச் செய்திருந்தார் என்றால்,
அதன்பின் கடவுள் வேறொரு நாளைப் பற்றிப் பேசியிருக்க மாட்டார். [4]
9 ஆதலால், கடவுளுடைய மக்கள் ஓய்வெடுக்கும் காலம்
இனிமேல்தான் வரவேண்டியிருக்கிறது.
10 ஏனெனில், கடவுள் தம் வேலையை முடித்துவிட்டு ஓய்வு எடுப்பது போலவே,
கடவுள் தரும் ஓய்வைப் பெற்றுவிட்டவர்
தம் வேலையை முடித்துவிட்டு ஓய்வு எடுக்கிறார். [5]
11 ஆதலால், கீழ்ப்படியாதவர்களின் மாதிரியைப் பின்பற்றி,
எவரும் வீழ்ச்சியுறாதவாறு அந்த ஓய்வைப் பெற முழு முயற்சி செய்வோமாக.
கடவுளுடைய வார்த்தை
12 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது;
இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது;
ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது;
எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது;
உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
13 படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை.
அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன.
நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்.
4. இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மேன்மை
மாபெரும் தலைமைக் குரு இயேசு
14 எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை
நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால்
நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!
15 ஏனெனில், நம் தலைமைக் குரு
நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல;
மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்;
எனினும் பாவம் செய்யாதவர்.
16 எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும்,
ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும்,
அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.- குறிப்புகள்
[1] 4:4 - தொநூ 2:2.
[2] 4:5 - திபா 95:11.
[3] 4:7 - திபா 95:7,8.
[4] 4:8 - இச 31:7; யோசு 22:4.
[5] 4:10 - தொநூ 2:2.