1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என
இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்;
ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால்
தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார்.
2 நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே;
நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.
புதிய கட்டளை
3 அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால்
நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும்.
4 "அவரை எனக்குத் தெரியும்" எனச் சொல்லிக் கொண்டு
அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்;
உண்மை அவர்களிடம் இராது.
5 ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம்
கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது;
நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம்.
6 அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர்
அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்.
7 அன்பிற்குரியவர்களே!
நான் உங்களுக்கு எழுதுவது புதியதொரு கட்டளை அல்ல;
நீங்கள் தொடக்கத்திலிருந்தே பெற்றிருந்த பழைய கட்டளை தான் அது.
நீங்கள் கேட்டறிந்த வார்த்தையே அப்பழைய கட்டளை. [1]
8 இருப்பினும் நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளையே.
அது புதியது என்பது கிறிஸ்துவின் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் விளங்குகிறது.
ஏனெனில் இருள் அகன்று போகிறது; உண்மை ஒளி ஏற்கெனவே ஒளிர்கிறது.
9 ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு
தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர்.
10 தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்;
இடறி விழ வைக்கும் எதுவும் அவர்களிடம் இல்லை.
11 தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கின்றனர்;
இருளில் நடக்கின்றனர்.
அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
ஏனெனில் இருள் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டது.
உலகப் பற்றை விடுதல்
12 என் பிள்ளைகளே, அவர் பெயரால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன.
எனவே உங்களுக்கு எழுதுகிறேன்.
13 தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
எனவே உங்களுக்கு எழுதுகிறேன்.
இளைஞர்களே, தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள்.
எனவே உங்களுக்கு எழுதுகிறேன்.
14 சிறுவரே, நீங்கள் தந்தையை அறிந்துள்ளீர்கள்.
எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன்.
தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன்;
இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள்,
கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கிறது;
தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள்.
எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன்.
15 உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள்.
அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது.
16 ஏனெனில் உலகு சார்ந்தவையான உடல் ஆசை,
இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை
தந்தையிடமிருந்து வருவன அல்ல. அவை உலகிலிருந்தே வருபவை.
17 உலகம் மறைந்து போகிறது; அதன் தீய நாட்டங்களும் மறைந்து போகின்றன.
ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்.
எதிர்க் கிறிஸ்துகள்
18 குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம்.
எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே!
இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர்.
ஆகவே இறுதிக் காலம் இதுவேயென அறிகிறோம்.
19 இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்;
உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல;
நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள்.
ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெள்ளிடைமலை.
20 நீங்கள் தூயவரால் அருள் பொழிவு பெற்றிருக்கிறீர்கள்.
ஆகையால் நீங்கள் அறிவு பெற்றுள்ளீர்கள். [2]
21 நீங்கள் உண்மையை அறியவில்லை என்பதால் நான் உங்களுக்கு எழுதவில்லை;
மாறாக, அதை அறிந்துள்ளீர்கள் என்பதாலும்
பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே நான் எழுதியுள்ளேன்.
22 இயேசு 'மெசியா' அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்?
தந்தையையும் மகனையும் மறுப்போர்தாம் எதிர்க் கிறிஸ்துகள்.
23 மகனை மறுதலிப்போர் தந்தையை ஏற்றுக்கொள்வதில்லை;
மகனை ஏற்று அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர்.
24 தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்;
தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால்
நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள்.
25 அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும்.
26 உங்களை ஏமாற்றுகிறவர்களை மனத்தில் கொண்டு இவற்றை உங்களுக்கு எழுதியுள்ளேன்.
27 நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது.
அதனால் உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய தேவையில்லை.
மாறாக, நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவால்
அனைத்தையும் கற்றுக்கொள்கிறீர்கள்.
அவ்வருள்பொழிவு உண்மையானது; பொய்யானது அல்ல.
நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப அவரோடு இணைந்து வாழுங்கள்.
28 ஆகவே, பிள்ளைகளே,
அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவும்
அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும்
அவரோடு இணைந்து வாழுங்கள்.
இறைமக்களென வாழுங்கள்
29 அவர் நேர்மையாளரென நீங்கள் அறிந்துகொண்டால்,
நேர்மையாகச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து பிறந்தவர்கள்
என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.- குறிப்புகள்
[1] 2:7 - யோவா 13:34.
[2] 2:20 - "அறிவு பெற்றுள்ளீர்கள்" என்னும் சொற்றொடர் "அனைத்தையும் அறிந்துள்ளீர்கள்" எனப் பல கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.